நட்சத்திரக்காட்சி Print
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Sunday, 17 June 2012 08:03

பத்தாம் வகுப்பு படித்தாலும், பட்ட மேற்படிப்பு படித்தாலும் , படிப்பவர்கள் மாணவர்கள் தான். இரு தரப்பினருமே இறுதி பரீட்சை முடியும் நாளை திருவிழா நாள் போல் தான் கொண்டாடுவார்கள்.கிரேட் லேக்ஸ் மாணவர்கள் சற்று வித்தியாசமானவர்கள் , கிரேட் லேக்ஸ் மாணவர்கள் என்று சொல்வதைவிட கர்மயோகா மாணவர்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.இன்னும் ஒரு வாரத்திற்குள் படிப்பு முடியும் நிலையில் ,தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கிராமத்தில் ‘ நட்சத்திர காட்சி’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் மாணவி அனாமிகா.கொத்திமங்கலத்திற்கு வாரம்தோறும் செல்லும் கர்மயோகா வாகனத்தில்,20 நபர்கள் பயணிக்கமுடியும் வழக்கமாக அந்த கிராமத்திற்குரிய நபர்கள் 4 அல்லது 5 பேர் செல்வர் ஆனால் இன்று வாகனத்தில் அமர்வதற்கு கூட இடமில்லாமல் வாகனத்தில் நின்றுக்கொண்டு மற்ற மாணவர்களும் பயணித்தனர். இது மட்டுமில்லாமல் தங்களது தனி வாகனத்திலும் சிலர் .பயணித்தனர்.கொத்திமங்கலம் என்ற பேருக்கு ஏற்றார் போலவே கிராமமும் வித்தியாசமாக காட்சி அளித்தது.உயர்ந்த நிலையில் வசிப்பவர்கள், நடுதர வர்கத்தினர் , பழங்குடியினர் என்று முப்பிரிவான மக்கள் கொத்திமங்கலத்தில் வசிக்கின்றனர். சுடுகாட்டிற்கு பக்கத்திலிருந்து துவங்குகிறது பழங்குடியினர்களின் குடியிருப்பு. மழை பெய்தால் தண்ணீரில் மிதக்கும் குடிசை வீடுகள்.தினமும் சாப்பிட சம்பாதித்தால் போதும் அதுவே பெரும் சாதனை என எண்ணம் கொண்ட மக்கள். கிரேட்லேக்ஸ் மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் கிராமத்திற்கு செல்லும்போது உறவினர்கள் வீட்டிற்கு வந்ததை போல அவர்களை சூழ்ந்துக்கொள்கின்றனர்.
இரவு நேரம், மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் கிராமம் முழுவதும் இருள் பரவி இருந்தது.கிராமத்திற்கு செல்லும் பாதை மணல் பாதை அதனால் மணலுக்குள் மோட்டார் பைக் சிக்கிக் கொள்ள அதில் பயணித்த இரண்டு கர்மயோகா மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுவிட, அந்த கணமே எல்லோர் முகத்திலிருந்த மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது.
கர்மயோகா மாணவர்கள் சூழ்நிலையை உணர்ந்தவர்கள் என்பதால் தங்கள் கைகளில் வழியும் இரத்தத்தை பொருட்படுத்தாது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் குறிப்பிட்டபடி நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று மற்றவர்களை அனுப்பிவைத்தனர்.இங்கு வசிக்கும் ஒரே ஒரு மாணவனையாவது பட்டப்படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும்.அது தான் என் கனவு என்னுடைய படிப்பு முடிந்துவிட்டாலும் நான் இந்த கிராமத்திற்கு வந்து சேவை செய்வேன் என்று சொன்ன மாணவர் ஹரிஹரன் உண்மையில் கர்மயோகி தான்.
அந்த பகுதியில் வசிப்பவர்களில் பாதி குழந்தைகள் பள்ளிகூடம் செல்ல விரும்பாதவர்கள், படிப்பு வாசனை அறியாதவர்கள், அறவியலை அறிய 40 திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஓடோடிவந்தனர்.அவர்களை வரிசைப்படுத்தி, டெலஸ்கோப்பின் உயரம் எட்டாத குழந்தைகளை கையில் தூக்கிவைத்துக்கொண்டு வானத்தில் மின்னும் நட்சத்திரத்தை அடையாளம் காட்டினார் சைன்டிஸ்ட் பார்த்தசாரதி.
விடைபெறும்போது சிறியவர் முதல் பெரியவர் வரை கை அசைத்து கரகோசத்துடன் வழியனுப்பிய காட்சி, எல்லோர் மனதிலும் என்றும் நிழலாடும். கிராம மக்களின் பிரியத்தைக் காணும்போது,அந்த அன்பு தன்னலமில்லாமல் கடந்த ஒரு வருடமாக கொத்திமங்கலத்தில் கர்மயோகா மாணவர்கள் செய்த வேலைக்கு கிடைத்த பாராட்டாகத் தான் தோன்றியது.

Last Updated on Sunday, 17 June 2012 08:04