கூண்டுப் பறவைகள் ...!! Print
Written by இந்துமதி   
Friday, 25 January 2013 06:27



இத்தனை சிறிய கூண்டுதான்
அத்தனை பெரிய பிரபஞ்சத்தின்
'அகலமே' என்பது
இவர்களின் நிஜம் !

சூரியன் அடைபட்டால் தான்
இரவென்பதல்ல ...,
வீட்டுக்கதவு அடைக்கபட்டால் கூட
இவர்களது நாள்
இருளிற்கு நகர்கிறது !

இவர்களுக்கு உணவிடும்
வேளையில் ,
உலகத்தின் மற்றவர்களும்
உணவருந்துவார்கள் என்பது
இவர்களின் கணிப்பு !

தான் கீச்சிடும் சத்தம்
கேட்டு தான்
உலகமே விழித்துக்கொள்கிறது என்பதில்
இவர்களுக்கு பெருமிதம் !

தன்  கூண்டைத்தாண்டி
வீட்டில் வாழும்
எவருக்கும் தன்னுடலைப்போல 
நிறங்களின் வண்ணகலவையில்லை என்பதில்
இவர்களுக்கு பேரானந்தம் !

தனினத்தவரைப்  போலவே
மற்றவர்களுக்கும் இன்னும்
சுதந்திரம் கிடைக்கவில்லையோ
என்ற கற்பனையுலகம் தான்
இவர்களின் ஒரே ஆறுதல் !

தனக்கு விதிக்கப்பட்டுள்ள
அத்தனை  சிறிய கூட்டுக்குள்ளும் கூட
அனைத்துலக சந்தோஷத்தையும்
ரசித்து வாழும்
'இவர்கள் -இவைகளல்ல ' !!!

Last Updated on Friday, 25 January 2013 06:30