Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா
|
Sunday, 09 December 2012 07:32 |
கலையை கனப்படுத்த வந்திருக்கும் கவிஞர்களில் குமரித்தோழன் கவனத்திற்குரிய கவிஞர் என்பதற்கு அவரது கவிதை நூல்களே சாட்சி எனலாம். வாழ்க்கையின் யதார்த்தங்களிலிருந்து வேறுபடாமல் நிஜங்களையும், வாழும் சூழல் சார்ந்த சமூக அக்கறைகளையும், மனித நேயங்களையும் தேர்வு செய்து, மனித வாழ்க்கையை அருமையாக படம் பிடித்தும் அவற்றை கவிதை நூல்களாக வெளிய
ிட்டு வாசகர்களின் வசமாகிப்போனவர் கவிஞர் குமரித்தோழன். இவரது சிந்தனை சிம்மாசனத்திலிருந்து வேர்விட்டு கிளம்பும் இவரது கவிதைகள், ஒடுக்கப்பட்டவர்களின் இருண்ட வாழ்க்கையையும், அவர்களது ஓலக்குரல்களையும் உள்வாங்கி இருக்கின்றன. விடியலைத்தேடும் முயற்சிகளில் மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையையும் கொண்ட இவர் உலகத்தின் அதிசயங்கள் ஏழு என்பதைப்போல ஏழு நூல்கள் எழுதியுள்ளார். மிலனின் முத்து எனும் குறுங்காவியம், பிள்ளைகளே உங்களுக்காக எனும் பொது அறிவு நூல், மறப்புலி எனும் புதினம், தூய ஜான் மரிய வியானி எனும் வரலாறு நூல், சின்னராணி எனும் வரலாறு நூல், தணியாத தாகங்கள் எனும் கவிதைத்தொகுதி, விடியல் தேடும் விதிகள் எனும் கவிதைத்தொகுதி என ஏழு நூல்கள் இவர் படைப்பில் வெளிவந்திருக்கின்றன. இவரது தணியாத தாகம் கவிதைத்தொகுதி பல இலக்கிய விமர்சகர்களாலும்,மாணவ மாணவியர்களாலும் படிக்கப்பட்டு பாராட்டப்பட்டிருக்கிறது. வறுமை என்ற பிணியினை படைத்த இறைவன் யாரோ வறியோர் செல்வர் பாகுபாடு மானிட மடமையின் வெளிப்பாடு –என்ற கவிதை வரிகள் நிஜங்களையும், நியாயங்களையும் சுட்டிக்காட்டுவதோடு பாகுபாடு மானிட மடமையின் வெளிப்பாடு என்று சாட்டையாக சுழலப்படுகிறது இவரது அனல் கவிதைகள். இவரது இன்னொரு கவிதைத்தொகுப்பு நூலான விடியல் தேடும் விதிகள் நூலில் மரண ஓலமிடுகின்றது கல்வி இன்று கள்வர் குடோனில் காய்ந்து கிடக்கும் கல்விக்கூடங்களைக்கண்டு- என்று கல்வியின் வெளிப்பாடு குறித்த நிஜ சிந்தனைகளை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். இது தவிர இறைவார்த்தை, உலகின் கடை எல்லை வரை, அன்னை எங்களோடு கூறியன, சகோதரனின் காவலன், எடத்துவா தூய ஜார்ஜியார், உயிர் நினைவுகள் என ஆறு வேற்று மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இவர் கவிஞர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நாடக நடிகரும், எழுத்தாளரும் நாடக இயக்குநரும் கூட. வைர நெஞ்சம், சக்தி, உதிரிப்பிறவி, பாஞ்சால சிறுத்தை, திருப்புமுனை, இறைமாட்சி, முத்துப்பல்லன், மாவீரன் இப்தா, தூய தோமையார், மூர்க்க வீரன், பதுவை இதயம், மாயரூபம், ஏன்?, இறைமைந்தன், மாளிகை தேடிய மயில், மறைத்தொண்டன் என பதினாறு மேடை நாடகங்கள் எழுதி அத்தனையும் மேடைகளில் நடிக்கப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றவர். இது தவிர இருபத்தி ஏழு ஓரங்கநாடகங்கள், பதிமூன்று தனி நபர் நாடகங்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய பாடல்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க தெரு நாடகங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.. இவர் சிறந்த கலைஞர் மட்டுமல்ல ஒரு சிறந்த பட்டிமன்ற நடுவர் மற்றும் பேச்சாளரும் கூட.. சுமார் 200 க்கும் மேற்பட்ட பட்டி மன்றங்களிலும் சுமார் 300 க்கும் மேற்பட்ட மேடைகளிலும் அற்புதமாக பேசி அனைவரது கைத்தட்டல்களை அள்ளூபவர், 25 க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் கலந்து கொண்டு தனது உணர்வுப்பூர்வமான கவிதைகளை வாசித்து அரங்கங்களை அதிர வைத்து கேட்பவரை வசியப்படுத்தியதுண்டு. இவரது படைப்புகள் எம்.ஏ, எம்.பில் பி.ஹெச்.டி பயிலும் மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டு பலரும் பட்டம் பெற்றிருக்கிறார்கள், குமரித்தோழனின் மேடை நாடகங்கள் ஓர் ஆய்வு என்று திரு ஜார்ஜ் என்பவரும், குமரித்தோழனின் நாடகங்களில் சமூகப்பார்வை என்று செல்வி ரெஜியும், குமரித்தோழனின் மேடை நாடகங்கள் என்று திரு ஹரிகுமாரும், குமரித்தோழனின் கிறிஸ்தவ மேடை நாடகங்கள் என்று மிஜோடார்சிலினும், அச்சில் ஏறாத கிறிஸ்தவ மேடை நாடகங்கள் என்ற தலைப்பில் திருமதி மோஸாலினோவும் ஆய்வு செய்திருக்கிறார்கள், மாவட்ட நாடகக் கலைஞர்கள் சங்கம் இவருக்கு கலைவாணர் விருதும், தமிழ்நாட்டு கலை பண்பாட்டுத்துறையும் தென்மாவட்ட கலைச் சங்கங்களின் கூட்டமைவும் இணைந்து கலைச்சுடர் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. குமரிமாவட்டத்திலிருந்து வெளிவரும் ஒளிவெள்ளம், எழுமின் மாத இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருக்கும் இவர் ஒளிவெள்ளம் மாத இதழில் ``இந்தீவரம்’’ எனும் தொடரையும், எழுமின் மாத இதழில் ’’வாழ்வாங்கு வாழ’’ எனும் வாழ்வியல் தொடரையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள், கவிதைகள் பல மாத இதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. தமுஎகசவின் மாவட்ட துணைத்தலைவராகவும் மற்றும் இலக்கிய குழு ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் வெளியீட்டுக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இலக்கிய உலகில் மேலும் பல நூல்களையும், நாடகங்களையும், படைத்து பல பட்டங்களையும் பெற்று மேன்மேலும் வளர முதற்சங்கு மனதார வாழ்த்துகிறது. முகவரி: தச்சக்கோடு, மெதுகும்மல் அஞ்சல், குமரிமாவட்டம் – 629 172 கைபேசி 9486012720 இமெயில்:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
|
Last Updated on Sunday, 09 December 2012 07:35 |
நூல் விமர்சனம் - குழந்தைகளைத்தேடும் கடவுள் |
|
|
|
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா
|
Sunday, 09 December 2012 07:19 |
இன்று குழந்தைகளைத்தேடும் கடவுள் எனும் கவிதை நூல் ஒன்றை படித்தேன். எல்லாம் கைக்கூ கவிதைகள் என்றாலும் நறுக்கென்றும் நச்சென்றும் இருந்தது ஒவ்வொரு கவிதைகளும் அதைப்பற்றிய நூல் விமர்சனம் இதோ. நூல் விமர்சனம் குழந்தைகளைத்தேடும் கடவுள் எழுதியவர் : ச. கோபிநாத் மனதைத் தொடும் ஹைக்கூ கவிதையோடு களம் இறங்கியிருக்கிறார் கவிஞர் ச.கோபிநாத். தனது குழந்தைகளைத்தேடும் கடவுள் என்ற இந்த இரண்டாவது கவிதைத்தொகுப்ப
ு நூலின் மூலமாக பல வாசகர்களின் மனதைத் தொட்டிருக்கிறார். எளிமையான விஷயங்கள் கைக்கூவாய் இவரது பேனாவிலிருந்து புறப்பட்டு அது வாசகனை வந்தடையும்போது பிரமிக்க வைக்கிறது. இந்த இளைய படைப்பாளி குழந்தைகளின் வாழ்வியலை அழகாய் வடித்தாலும் சமுதாயத்தின் மீதுதான் அதிகமாய் தனது சாட்டையை சுழட்டியிருக்கிறார். குழந்தைகளின் கேள்விகள் ஆழமாய் கற்பித்தன புத்தகங்களில்லா உலக அறிவு என்று குழந்தைகளைப்பற்றின அறிவுசார்ந்த கவிதைகளை வெறும் மூன்றே வரிகளில் முத்து முத்தாய் எழுதியிருப்பது நூலுக்கு மேலும் மேலும் அழகு சேர்க்கிறது. சமுதாயப்பார்வையும் அதுசார்ந்த கவிதைகளும் நிஜங்களின் வலிகளை நியாயப்படுத்துகின்றன. உயிரினங்களின் உணர்வுகளை, பறவைகளின் ஏக்கங்களைக்கூட பதிவு செய்திருக்கிறார். திசை திரும்பின தாகத்துடன் பறவைகள் வறண்ட குளம். இப்படி முப்பது வரிகளில் சொல்லவேண்டிய விஷயங்களை வெறும் மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் சொல்லியிருப்பது அழகு. வானத் தூரிகையின் வண்ண ஓவியம் அந்திப் பொழுது என்று அந்திவானத்தின் அழகை மிகவும் அழகாய் ரசிக்கிறார். போதையேற்றும் அறிவியல் சாதனம் தொலைக்காட்சி என்று சமூகத்தின் பண்பாட்டு சீரழிவுகளை அழகாகவே படம் பிடிக்கிறார் இந்த அழகிய கவிஞர் ச.கோபிநாத். எளிமையும் எதார்த்தமும் கொண்டு கவிதைகள் கவன ஈர்ப்பை பெறுவதால் எல்லோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு. இந்த குழந்தைகளைத் தேடும் கடவுள். வெளியீடு : வாசகன் பதிப்பகம், 11/96 சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015 விலை. ரூ.50 பக்கம்-96 அலைபேசி : 9790231240
|
Last Updated on Sunday, 09 December 2012 07:21 |
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை (நாடகம்) |
|
|
|
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா
|
Sunday, 09 December 2012 06:52 |
தேவசகாயம்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறை குமரிமாவட்டத்தில் மட்டும் 200 க்கும் மேலான மேடைகளில் நடித்திருக்கிறோம். வேதசாட்சியாக இருந்த அவர் மறைசாட்சியாக மாறிய இத்தருணத்தில் அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு காட்சி-15 இடம்: அரண்மனை அ.வகிப்போர்:மன்னர், தளபதி, பூசாரி, தேவசகாயம், சேவகன் அமைப்பு: (மன்னர் அமர்ந்திருக்க தேவசகாயம்
விலங்கிட்டு சேவகன் அழைத்து வருகிறான்) மன்னர்: நீலகண்டா, நிமிர்ந்து பார், ஏன் தயங்குகிறாய், தேவ: தயக்கமில்லை மன்னா, தாங்கள் அழைத்தீர்கள் வந்தேன். கேட்க வேண்டியதை கேளுங்கள், கூறுகிறேன். மன்னர்: என்ன அவ்வளவு தூரத்திற்கு வந்துவிட்டாயா? நீலகண்டா, கண்ட மதத்தை கொண்டது குற்றமல்லவா? மன்னன் மக்களை அவதூறாக பேசியது குற்றமல்லவா? தேவ: குற்றமென்று கோமகன் கூறுகிறீர்கள் இஷ்டப்படி நடப்பது குற்றமென்றால் குடிமக்களின் இஷ்டத்தை தடுப்பது குற்றமல்லவா? தளபதி: கண்டரே, மன்னரை மறைமுகமாக பேசியது போதாதென்று நேராகவும் பேச துணிந்து விட்டாயா? உனக்கு வெட்கமில்லை. தேவ: வெட்கப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை, பெருமைப்படவேண்டியது எவ்வளவோ இருக்கிறது, சிறிது சிறிதாக தோன்றி மறைந்து வந்த பழங்காலக் கலைகளுக்கு புத்துயிர் அளித்த பெருமை மிக்கது என் கிறிஸ்தவ மறை. அனாகரிகத்தில் வளர்ந்திருந்த ஆயிரமாயிரம் காட்டுமிராண்டிகளைத் திருத்தி பெருமை பெற்றது எங்கள் மறை. இதுபோல வேறு எந்த மறையாவது அல்லது அரசாங்கமாவது செய்திருக்கிறதா? இல்லை செய்யத்தான் முடியுமா? மன்னர்: முடியாதென்றால் உன்னை இங்கு அழைத்து வந்திருக்க வேண்டாம், முடியாதென்று இறந்தவன் தானே உன் கிறிஸ்து. தேவ: கிறிஸ்து, கருணையின் சிகரம், இரக்கத்தின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், அவர் அனைவரையும் மீட்க விரும்புகிறார், தன்னையே வெறுத்த அன்னாசையும் கைப்பாசையும் பரிசேயரையும்கூட பாழ்படுத்த விரும்பவில்லை. பூசாரி: போதும் உன் புத்திமதி. பொல்லாதவற்றை கூறும் நின் நாவில் இல்லாத கதை அளக்க வேண்டாம். மன்னர்: நிலையற்ற வாழ்வை எண்ணும் நீலகண்டா..மனதை மாற்றி மன்னன் மதத்தை அண்டிவிடு, அர்த்தமற்ற அன்னிய மதம் உனக்கு வேண்டாம், நம் மதத்தை வெறுத்துரைக்கும் அவர்களின் மமதையை மடக்கிவிடுவேன். தேவ; மன்னவா…கிறிஸ்தவர்கள் ஒன்றும் மமதையில் பிற மதத்தை வெறுத்து ஒதுக்குவதில்லை, நட்புடன் நண்பர்களாக்கும் உயர்ந்த நோக்கத்தையும் பரந்த உள்ளத்தையும் கொண்டவர்கள் மன்னா, கொண்டவர்கள். மன்னர்: அரச விசுவாசம் உனக்கிருந்தால் நீ செய்த தவறைக்கண்டு திருந்தி என்னிடம் அண்டியிடு தேவ: மன்னவா, கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவர்கள் பட்ட வேதனையைக்கேட்டால் உன் உள்ளம் துடிக்கும், நெஞ்சம் குமுறும், நான் கொலை செய்யவில்லை, கொள்ளையடிக்கவில்லை, நாட்டிற்கு விரோதமாய் கலகம் செய்யவில்லை, கிறிஸ்துவை பின்பற்றியதே நான் செய்த குற்றம், இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா? மன்னர்: கண்டா, மன்னிப்பு கேட்கிறாயா? அல்லது துன்பங்களை ஏற்றுக்கொள்கிறாயா? தேவ: மன்னவா, துன்பங்களைக்காட்டி திருத்திவிடலாமென்ரு எண்ணுகிறீர்கள், துன்பத்தில் வளர்ந்து மடிந்த என் ஏசுவின் வரலாறைக்கேட்டால் காது நாணும், மனம் கூசும், படிக்க கண் கலங்கும், அவர் வேதனைப்பட்ட இடங்களில் கிடந்த கல்லிற்கும் மண்ணுக்கும் கண் இருந்தால் கண்ணீர் விட்டு அழுதிருக்கும், தூணுக்கும் கூரைக்கும் வாயிருந்தால் கதறி புலம்பியிருக்கும், ஆனால் இரக்கமற்ற மக்கள் கூட்டம் பல்லிளித்து வேடிக்கை பார்த்தது, கை தட்டி ஆர்ப்பரித்தது. மன்னர்: அர்த்தமற்ற சான்றுகள் தேவையில்லை, ஆனால் உனக்கு வரும் துன்பங்கள் இவற்றைப் போன்றதன்று, எவராலும் கணக்கிட முடியாது. தேவ: மன்னவா, கொடிய மிருகங்களின் கோரைப்பற்களிலே, கூரிய நகங்களிலே, நான் தூக்கி எறியப்படலாம், ஆனால் அப்பொதும் ஏசுவின் நாமம் என் நாவில் எழும், தெருத்தூண்களில் கட்டி வைத்து தீ மூட்டலாம், அப்போதும் விண்நோக்கி புன்முறுவல் பூப்பேன், கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான வீதிகளில் இழுத்துச்செல்லுங்கள், அப்போதும் இயேசுவின் நாமம் பாடுவேன், கொதிக்கும் எண்ணையில் என்னை இடுங்கள், முகம் மலர்வேன், இன்னும் எந்த வகையான வதையானாலும் மன்னா வாட்டம் காண மாட்டேன். மன்னர்: வாட்டம் காண்கிறாயா இல்லையா என்று பார்ப்போம், உண்ண உணவும் குடிக்க தண்ணீரும் இன்றி சிறையிலே அடையுங்கள், ஆனந்த வாழ்வைப்பற்றி சிந்திக்கட்டும், சிந்தித்து முடிவெடுக்கட்டும், காவல் கடுமையாக இருக்கட்டும், ம் கொண்டு செல்லுங்கள் இவனை சிறைக்கூடத்திற்கு… (சேவகன் இழுத்துச்செல்கிறான்) திரை இந்த நாடகத்தை உங்க ஊர் கோவில் திருவிழாவில போடணுமா சொல்லுங்க போட்டுருவோம் தொடர்புக்கு 9791820195
|
Last Updated on Sunday, 09 December 2012 07:19 |
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா
|
Sunday, 24 June 2012 17:18 |
குமரி ஆதவன்
என் விலாசத்தை என் வீதியில் தேடுகிறேன் என்றான் கஜல் என்ற உருதுமொழிக்கவிஞன். குமரிமாவட்ட படைப்பாளிகள் பலரும் தனக்கென்று தனி முகவரி படைத்தவர்கள். தோப்பில் முகமது மீரான், நீல பத்மநாபன், பொன்னீலன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், என்று பட்டியல் நீளும். அந்த வரிசையில் தனக்கென்று தனி முகவரி மட்டுமல்ல தனி முத்திரையும் பதித்தவர் குமரி ஆதவன்.
இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் ஆசானாக ஆசிரியராக பணி செய்து வந்தாலும் எழுத்தார்வம் மீது இவருக்கிருக்கும் பன்முக ஆர்வம் பலரது விழிகளை விரியச்செய்யும். இவர் பல விருதுகளுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல, பல விடாமுயற்சிகளுக்கும் சொந்தக்காரர்.
இவரது எழுத்துக்கள் ஏராளமான கனவுகளை சுமந்துகொண்டு வாழும் மனித இதயங்களை எல்லாம் உழத்தொடங்கி சீர்படுத்தும் ஆற்றல் கொண்டவை. யதார்த்த அணுகுமுறையில் தொடங்கும்இவரது சிந்தனைகள் பலரையும் ஈர்பதுண்டு,
உயிரோட்டம் மிகுந்த எழுத்தார்வம் இவரை பனிரெண்டு நூல்களை எழுத் தூண்டியிருக்கிறது கவிதை நூலில் தொடங்கி ஆய்வு நூல்கள் வரை அத்தனையும் இலக்கிய தரம் சார்ந்த நூல்களாக இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு.
இவர் எழுதிய ரத்தம் சிந்தும் தேசம், எரிதழல் கொண்டு வா, அருமை மகளே ஆகிய கவிதை நூல்கள் பல ரணங்களின் வலிகளை வரிகளாக்கி கவிதை நூலாக்கியிருக்கிறார். நிராகரிக்கப்பட்ட மக்களின் நியாயத்தை நியாயப்படுத்துவதற்கென்றே எழுதப்பட்ட கவிதை நூல்கள் என்றும் சொல்லலாம். இவரது சிகரம் தொடு எனும் கவிதை ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் பாடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்களான குருதியில் பூத்த மலர், அறிக பாசிசம், குலைகுலையா முந்திரிக்கா, ஒரு தமிழ்சிற்பியின் பயணம், தெற்கில் விழுந்த விதை போன்ற நூல்கள் காலத்தால் அழியாத கருத்துப்பெட்டகங்கள். தேவசகாயம் பிள்ளை வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்வுகளை அவர் பட்ட அவலங்களை மிக அழகாக தெற்கில் விழுந்த விதை எனும் நூலில் எழுதியிருக்கிறார்.
இது தவிர ஆதவன் கேள்வி பதில்கள், என் கேள்விக்கென்ன பதில், பேரறிஞர்களுடன் என்ற நேர்காணல் நூலும் வெளியிட்டுள்ளார். மொத்தம் பதினொன்று நூல்கள் வெளியிட்டிருக்கும் குமரி ஆதவன் குழந்தைகளின் எதிரிகள் (ஆய்வுநூல்), இல்லறப்பூங்கா(கட்டுரைகள்), எத்தனைப்பிறவிகள்(புனித ஜார்ஜியார் வரலாறு) பிரான்சின் தேவதை(புனித பெர்னதத் வரலாறு) இடியும் சுவர்கள் (சிறுகதை தொகுப்பு) மண்சோறு (சிறுகதை தொகுப்பு) என ஆறு நூல்கள் வெளியிட தயார் நிலையில் வைத்துள்ளார். கூடிய விரைவில் அவை நூல்களாக மலர்ந்து தமிழ் நெஞ்சங்களில் கைகளில் தவழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இவரது நூல்கள் பல இளைய தலைமுறைகளின் ஆய்வு நூல்களாக எடுத்தாளப்பட்டு பலரும் பட்டங்கள் வாங்கிட இவர்து நூல்கள் உதவியிருக்கின்றன. திரு பாலஸ் நாகர்கோவில் அவர்கள் குமரிமாவட்ட எழுத்தாளர் குமரி ஆதவன் எனும் பெயரிலும், தே.ஜான்சி நாகர்கோவில் அவர்கள் குமரி ஆதவன் கவிதைகளில் புதிய மானுடச் சிந்தனைகள் எனும் பெயரிலும், சுனிதா நாகர்கோவில் அவர்கள் எரிதழல் கொண்டு வா கவிதைத் தொகுப்பு காட்டும் விடுதலைச்சிந்தனைகள் எனும் பெயரிலும் ஆய்வுகள் செய்துள்ளார்கள்.
திரு ஜெய்.ஜீவா குமரி ஆதவன் கவிதைகள் ஓர் ஆய்வு எனும் பெயரிலும், மே.சேம் டானியல் புதுக்கவிதைகளில் சமுதாய நோக்கு எனும் பெயரிலும், க. செலின் குமரி ஆதவனின் படைப்புகளில் விடுதலைச் சிந்தனைகள் எனும் பெயரிலும், பெனினா குமரி மாவட்ட புதுக் கவிஞர்களும் கவிதைகளும் எனும் பெயரிலும், மா. கார்த்திகேயன் புதிய தலைமுறைக் கவிஞர்களின் புதுக்கவிதைகள் எனும் ஆய்வுகள் மேற்கொண்டு பட்டங்கள் பெற்றிருக்கிறார்கள்.
இளைய தலைமுறையின் மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட குமரிஆதவன் அவர்களுக்கென்று எழுதிய கட்டுரைகள் பலரின் கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது. செண்பகமலர் மாத இதழில் எழுதிய சிகரம் நோக்கி சிறகடிப்போம் என்ற தொடர் கட்டுரை தன்னம்பிக்கையின் மறு வடிவமாகவே அமைந்து பலரின் வாழ்கைப் பாதையை மாற்றியமைத்தது. இதைப்போல உதயதாரகை மாத இதழில் உடைந்து சிதறும் குடும்ப உறவுகள் எனும் தொடர் கட்டுரை பல குடும்ப உறவுகளின் விரிசல்களை விலக்கி நல்லுறவை ஏற்படுத்தும் மிக அற்புதமான கட்டுரைகளாக மலர்ந்திருந்தன.
இளம் வயதிலேயே பல்வேறு இதழ்களில் எழுதத்தொடங்கிய குமரிஆதவன் தனது வீரியமிக்க விதைகளை கவிதைகளாக கட்டுரைகளாக, சிறுகதைகளக இருபத்திஏழுக்கும் மேற்ப்பட்ட தினசரி, வார, மாத இதழ்களில் எழுதி அவை வெளிவந்து பலரது பாராட்டு மழையில் நனைந்திருக்கிறார்.
இவரது படைப்புகள் தினமலர், தமிழ்முரசு, தீக்கதிர், கதிரவன், புதிய காற்று, வலம்புரிமங்கை, அமுதம், தென் ஒலி, யுகச்சிற்பி, யுகசக்தி, உதயதாரகை,,பூபாளம்,தேசியவலிமை,முதற்சங்கு, ஏழையின் குமுறல், குமரிக்கடல், துடிப்பு, வானவில், புனித குறள் அரசு, கரவொலி, இளைய நிலா, எதிர்நீச்சல், தடயங்கள், ஆனந்தம், வேளம், விடியலைநோக்கி, வெள்ளி நிலா போன்ற இதழ்களிலும் 25 க்கும் மேற்பட்ட ஆண்டு மலர்கள், சிறப்பு மலர்களில் இவரது படைப்புகள் வெளிவந்து அமோக ஆதரவைப் பெற்றிருக்கிறது.
இவரது படைப்புகளைப்போலவே இவரது படைப்புத்த்திறனை பாராட்டி கெளரவித்தவர்களின் எண்ணிக்கையும் பெற்ற விருதுகளும் அதிகம். 2005-ம் ஆண்டு இலக்கிய சாதனையாளர் விருது, 2006-ம் ஆண்டு நல்நூல் விருது, 2007-ம் ஆண்டு சேவைச்செம்மல் விருது மற்றும் மனித நேய முரசு விருது, 2008-ம் ஆண்டு இளம் இலக்கிய சாதனையாளர் விருது, மற்றும் நல்லாசிரியர் விருது, 2009-ம் ஆண்டு கலைச்சுடர் விருது என பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் இவர்.
பத்திரிகை துறையில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட இவர் தென் ஒலி, யுகசக்தி, உதய தாரகை போன்ற மாத இதழ்களின் துணை ஆசிரியராகவும், செண்பக மலர் மாத இதழின் ஆலோசகராகவும் இருந்து இதழ் வளர பெரும் பங்காற்றி வந்துள்ளார்.
ஒரு எழுத்தாளராக மட்டுமன்றி சிறந்த நடிகராக, சிறந்த பேச்சாளராக, பாடலாசிரியராக, ஆவண குறும்படத்தின் இயக்குநராக, சமூக மாற்றத்தின் முன்னோடியாக, புதிய தலைமுறைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசானாக, பல்வேறு இளைஞர் அமைப்புகளின் வழிகாட்டியாக, பல்வேறு பத்திரிகைகளின் ஆலோசகராக, பல மாணவ மாணவியர்களின் ஆசிரியராக பல்முகம் கொண்ட சிறந்த சாதனையாளர் இந்த குமரி ஆதவன்.
சன் டி.வி தொலைக்காட்சி அரட்டை அரங்கம் நிகழ்சியில் இருமுறை கலந்து கொண்டு தனது அனல் தெறிக்கும் பேச்சால் அரங்கத்தையே அதிர வைத்தவர் 500-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு தனது வீரிய கருத்துக்களைச் சொல்லி கேட்பவரை அசர வைப்பவர். தற்பொழுது திண்டுக்கல் லியோனி தலைமையிலான பட்டிமன்றங்களில் பேசிவரும் இவர் சன் டிவி, டி.டி.என், நெய்தல், சி.என்.ஆர் போன்ற தொலைக்காட்சிகளில் 25 க்கும் மேற்பட்ட பட்டிமன்ற நிகழ்சிகளில் பேசி பலரது புருவங்களை உயர வைத்தவர்.
இவரது படைப்புத்திறனைச் சொல்ல முதற்சங்கு இதழில் ஒரு பக்கம் போதாது முழு பக்கம் எழுதினாலும் இவரது இதரச் சிறப்புகள் எல்லாவற்றையும் எழுதிட முடியாது. வருங்காலம் இவரை இன்னும் பல விருதுகளுக்கு சொந்தக்காரராக்கி இலக்கிய உலகம் இவரை உயர்ந்த இடத்தில் வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
முகவரி: 10-113, செபாஸ்டின் இல்லம், குமாரபுரம் அஞ்சல், குமரிமாவட்டம்-629 189 தொலைபேசி: 04651-289391, 9442303783 . |
Last Updated on Sunday, 24 June 2012 17:19 |
|
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா
|
Wednesday, 20 June 2012 10:48 |
எழுத்தாளர் காஞ்சி சாந்தன்
பட்டு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் ஊர். காஞ்சிபுரம் பட்டுக்கு மட்டுமல்ல, கவி எழுதும் பல கவிஞர்கள் கொண்ட ஊர் என்பதிலும் பெருமையுண்டு. அந்த கவிஞர்க்ளில் இலக்கிய அடையாளம் கானப்பட்டு அகவை முதிர்ந்த தமிழறிஞராக, தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கவிஞர் காஞ்சி சாந்தன் அவர்கள்.
இவரது இயற்பெயர் செல்வராஜ் என்றாலும் காஞ்சி சாந்தன் எனும் புனைப்பெயரில் பல கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி இலக்கிய வீதியில் பலருக்கும் நன்கு பரிச்சயமானவர்.
இவரது கவிதைதொகுப்பு நூலாகிய ``விழிப்பூ’’ வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் நூலாக அமைந்து இளைய சமுதாயத்தினர் அனைவரது கைகளிலும் தவழும் நூலாக அமைந்திருக்கிறது. இந்த கவிதைநூலில் சமூக விடுதலைக்கான கோபம் கொப்பளிக்கும் வரிகளும், அன்பை ஆயுதமாக்கும் அற்புத வரிகளும் மலிந்து கிடக்கின்றன.
நியாயங்கள் நசுக்கப்படுவதும் அனியாயங்கள் அரியணை ஏறுவதையும் வேதனையோடும் வலிகளோடும் இவரது கவிதை வரிகள் கதறி அழுவது படிப்பவரின் நெஞ்சைப் பிழிகிறது.
இவரது சிறுகதை தொகுப்பு நூலான ~வீம்பு’’ பாதுகாக்கப்படவேண்டிய நூல்க்ளில் ஒன்று. மனித நேயத்தையும் எதார்த்தமான நிகழ்வுகளையும் உள்வாங்கி படைக்கப்பட்டிருக்கிறது. அறிவுசார்ந்த கருத்தாளமிக்க பல கதைகள் திணிக்கப்பட்டிருப்பதால் படிப்பவர் பலரையும் லெகுவாய் ஈர்த்துவிடுகிறது.இந்நூல் 1989-90 ல் தாம்பரம் கிறிஸ்தவக்கல்லூரி பி.ஏ பயின்ற மாணவர்களுக்கு துணைப்பாடநூலாக வைக்கப்பட்டிருந்தது.
இவரது மற்றொரு சிறுகதை தொகுப்பு நூலான ``ஊற்றுக்கண்’’ நூலில் யதார்த்தம் வரிந்து கட்டிக்கொண்டு முன்னால் வந்து நின்று விடுகிறது. உணர்ச்சிகள் வார்த்தைகளாய் வந்து விழுந்து விடுகிறது. இந்நூலில் பதிவாகியிருக்கும் ஒவ்வொரு கதைகளும் ஏற்படுத்தும் அதிர்வுகள் நம்மை ஆட்கொண்டு விடுகிறது.
சமுதாயத்தின் வலிகளும், வாழ்வுகளும் மகிழ்ச்சிகளும் படைப்புகளாக பரிணமிக்கும்போது நம்மை மீறிய பாராட்டுக்கள் காஞ்சி சாந்தன் அவர்களின் இதயம் நோக்கி பயணப்பட்டு விடுகின்றன.
கவிதைக்கென்று மன்றம் நடத்தி வருவ்து இவரது முக்கிய பணிகளில் ஒன்றாகும்.காஞ்சி கவிமன்றம் எனும் அமைப்பின் அமைப்பாளராகவும் தலைவராகவும் இருந்து இலக்கிய தொண்டாற்றியுள்ளார்.
கவின்ஞர் பொன் கவிக்கோ, சேதுராமன், பொன்னடியான், கவிப்பேரரசு வைரமுத்து,என பல்வாறு கவிஞர்கள் இந்த கவி மன்றத்துக்கு வந்து தங்கலது கவிதைகளையும் வாழ்த்துரைகளையும் வழங்கியிருக்கிறார்கள்.
இவர் திசைகள் வார இதழின் செங்கை மாவட்ட ஆசிரியராகவும், சாரல் இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பதிப்பாசிரியராகவும். கலயம் மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பணியாற்றி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
அறிஞர் அண்ணா அவர்களின் காஞ்சி வார இதழ் தொடங்கி நூற்றுக்கணக்கான ஏடுகளில் கவிதை எழுதியிருக்கிறார்.
சொந்தமாக கவிதா பிரசுரம் எனும் ஒரு பதிப்பகத்தை துவங்கி ``விழிப்பூ’’ ``வீம்பு’’ ``கமலி காத்திருக்கிறாள்’’ போன்ற நூல்களை அச்சிட்டுள்ளார்,
திரு சாண்டில்யன் அவர்களின் பல்லவதிலகம் நாவல் நாடக வடிவம் பெற்று அரங்கேறியபோது அதில் நகைச்சுவை பகுதியை எழுதும் வாய்ப்பு பெற்றதை பெருமையாக கருதுகிறார்.
இலக்கிய போட்டிகளில் இவர் பெற்ற பரிசுகளும் பாராட்டுகளும் ஏராளம். சென்னை பாரதி தமிழ்சங்கம் தமிழ்நாடளவில் நடத்திய கவிதைப்போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது பரிசு பெற்றிருக்கிறார். புதுச்சேரி முத்தமிழ் சங்கம் நடத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறார்.
காஞ்சியில் கவிதைச்சோலை அமைப்பின் மூலம் பாவேந்தர் பட்டயம் பாவேந்தரின் புதல்வர் அவர்களால் வழங்க்ப்பட்டது. அம்பேத்கார் இலக்கிய அமைப்பின் மூலம் பாவலர் முரசு விருது வழங்கப்பட்டிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து பேரவை காஞ்சிபுரம் கிளை சார்பாக வெள்ளி பணமுடிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இவர் மேலும் பல நூல்கள் எழுதி வெளியிட முதற்சங்கு சார்பில் வாழ்த்துகிறோம்.
முகவரி : பல்லவன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காஞ்சிபுரம்-631 501 கைபேசி 9600976176
|
Last Updated on Wednesday, 20 June 2012 10:50 |
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா
|
Wednesday, 20 June 2012 10:41 |
மணவை பொன் மாணிக்கம்
எழுத்தார்வமும் கலைஆர்வமும் இதழியல் ஆர்வமும் நடிப்பார்வமும் ஒருங்கே அமையப்பெற்றவர் திரு. மணவை பொன் மாணிக்கம. திரைப்பட இயக்குநர் திரு கே.பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைமை நிருபர் பொறுப் பேற்று இன்று வரை தொடரும் நீண்டகால பத்திரிகையாளர் இவர்..
திரைப்படத்துறையில் இவரை அறியாதவர்கள் இல்லை. பழம்பெரும் நடிகர்கள் தொடங்கி புதுமுக நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிஓவியர்கள், நடன இயக்குநர்கள் என்று பலதரப்பட்டவர்களிடம் பேட்டி எடுத்த பெருமை இவருக்கு உண்டு. பிலிம்நியூஸ் ஆனந்தனுக்குப் பிறகு திரைப்படத்துறையில் நன்கு பரிச்சயமானவர் இவர் மட்டுமே.
பாக்யாவின் மற்றொரு மாத இதழான பாக்யா டாப் ஒன் இதழுக்கு இவரே பொறுப்பாசிரியராக இருந்தவர். இவருக்கு எம்.ஜி.ஆர் மீதும் இயக்குநர் திரு.கே பாக்யராஜ் மீதும் அலாதி பிரியம். உண்டு. தனது வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்கள் என்ற மரியாதையை வைத்திருப்பவர்.
ஒரு எழுத்தாளராக இவரை பிரபலப்படுத்தியது இவரது எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் எனும் நூல். இதுவரை பதினான்கு பதிப்புகள் வெளிவந்து அமோக வரவேற்ப்பைப் பெற்று காலத்தால் அழியாத நூலாக மாறி இவருக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
இவர் எழுதிய இன்னொரு நூலான பிரபலங்கள் மனசுல மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர் எனும் நூலும் மிகப்பிரபலம். எம்.ஜி.ஆரை எல்லோருக்கும் ஏன் பிடித்திருக்கிறது ஏன் அவர் ஒரு மறக்க முடியாத மாமனிதர் என்ற வினாக்களுக்கான விடைகள் இந்த நூலிலுண்டு. மிகவும் பயனுள்ள நூல் இது.
இவரது மற்றொரு நூல் வாரியாரைக் கவர்ந்த புராணக் கதாபாத்திரங்கள். வாரியார் எப்படி தனது எளிய பேச்சால் கேட்பவரை வசீகரிப்பாரோ அதைப்போலவே இவரும் அவரைப்பற்றி எழுதி வாசகர்களை வசீகரித்திருக்கிறார்.
ஐந்தாம்வேதம் இவர் எழுதிய இன்னொரு குறுங்காவியம் ஆகும். தனது கிராமத்தை சுற்றி நடந்த காதல் நிகழ்வுகளை கற்பனை வளத்தோடு ஒரு திரைப்படம் எடுக்குமளவுக்கு மிக சிறப்பான நடையில் எழுதி வெளிவந்திருக்கும் இந்நூலுக்கு இருபத்தி ஐந்து கவிஞர்கள் அணிந்துரை எழுதியிருப்பது ஒரு புது முயற்சியாகவே தெரிகிறது. இந்நூலைப்படித்துவிட்டு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துகையில் ஒரு திரைப்படம் எடுப்பதற்க்கான எல்லா தகுதிகளும் பெற்ற குறுங்காவியம் இது பாராட்டியுள்ளார்.
இவரது மற்றுமொரு பிரபல நூல் வந்தாங்க ஜெயிச்சாங்க. கிட்டத்தட்ட எழுபத்தி இரண்டு முக்கிய பிரபலங்களைச் சந்தித்து அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதைப்பற்றிய பத்து செய்திகள் தாங்கி வெளிவந்திருக்கும் நூல் வந்தார்கள் ஜெயித்தார்கள் எனும் நூல். வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவர் கைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய நூல் இது.
இவரது அடுத்த நூலாகிய அன்புள்ள அம்மா இது பல தாய்மார்களின் காவியம் என்று சொல்லலாம். இந்த நூலுக்கான இவரது மெனக்கெடல்கள் ஏராளம். கிட்டத்தட்ட எழுபத்திஐந்து வி.ஐ.பிகளை சந்தித்து அவர்களின் அம்மாக்களின் அன்பை கேட்டு வாங்கி இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற வரிகள் இந்த நூலின் எல்லாப் பக்கங்களிலும் கசிந்து வழிகின்றன.
இது தவிர காதலும் வீரமும் என்ற கவிதை நூலும் வெளிவந்திருக்கிறது. நவீன காதலும் அது சார்ந்த ஊடலும் வீரமும் கவிதை நூலின் எல்லா பக்கங்களிலும் பரவி கிடக்கின்றன. எல்லா நூல்களும் கற்பகம் புத்தகாலயத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.
பிரபல வார இதழ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளும் வெளிவந்திருக்கின்றன. இதுதவிர மேடை வானொலி நாடகங்கள் பல எழுதியிருக்கிறார். மனிதன் என்ற போர்வையில், தகுதி, பத்தினிக்கும் பசிக்கும், கர்ப்பக்கிரகம் போன்றவைகள் இவர் இழுதி பிரபலமான வானொலி நாடகங்கள்.
இவர் திரைப்பட பாடல்கள் எழுதுவதிலும் கைதேர்ந்தவர். வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தில் இவர் எழுதிய முதன்முதலாய் உன்னைப் பார்க்கிறேன் என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் மிக பிரசித்தம். விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில் வரும் பாசமுள்ள சூரியரே பாடலும், இதயமே படத்தில் வரும் பாடம் சொல்லித் தருவாயா பாடலும், வணங்காமுடி படத்தில் வரும் வெடக்கோழி பாடலும் இப்பொழுதும் பலரும் முணுமுணுக்கும் பாடல்களாக அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு.
இது தவிர லுக், என்னவோ பிடிச்சிருக்கு, வசந்தசேன, காதல் எப்.எம், நினைவலைகள், அழகு பதினாறு இன்சூரன்ஸ், 21-ம் நூற்றாண்டு போன்ற திரைப்படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.
மணவை பொன் மாணிக்கம் ஒரு சிறந்த திரைப்பட நடிகரும்கூட, இவரை இயக்குநர் திரு கே.பாக்யராஜ் மற்றும் இயக்குநர் விக்ரமன் திரைப்படங்களில் அதிகம் பார்க்கலாம். அவசர போலீஸ் 100, ஆராரோ ஆரீராரோ, சுந்தர காண்டம், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, ஞானப்பழம், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள், தொண்டன், மூன்றாம்படி, திலகம், இயக்கம், புன்னகைதேசம், மகாநடிகன், பொம்மலாட்டம் போன்ற திரைப்படங்களிலும் இவரது நவரச நடிப்பைப் பார்க்கலாம்.
திருச்சியிலுள்ள மணப்பாரை இவரது பிறந்த ஊராக இருந்தாலும் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். எதிர் காலத்தில் ஒரு திரைப்படத்தை இயக்கும் ஆர்வத்திலிருக்கும் இவர் பல வெற்றிப்படங்களை இயக்க முதற்சங்கு மனதார வாழ்த்துகிறது.
முகவரி : மணவை பொன் மாணிக்கம்
63, ஐந்தாவது தெரு,
மேற்கு விஜயராகவபுரம், சாலிகிராமம்
சென்னை-93
கைபேசி : 9940495579 |
Last Updated on Wednesday, 20 June 2012 10:43 |
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா
|
Wednesday, 20 June 2012 10:38 |
கவிஞர் அ ஜனசிந்தன்
இலக்கிய வயல்களில் நல்ல தரமான கவிதைகள் வடிப்பது இவருக்கு கை வந்த கலை என்று தான் சொல்லவேண்டும். படிப்பறிவை விட பட்டறிவில் தான் வீரியமிக்க பல கவிதைகள் இவரது சிந்தனை வயல்களில் விளைந்து கிடக்கின்றன. தனது கற்பனை வளத்தால் பகுத்தறிவு, பொதுவுடைமை, சமுதாய அக்கறை, சமுதாய கோபம், பெண்விடுதலை, தன்னம்பிக்கை போன்ற சிந்தனைகளையும், விழிப்புணர்வு கவிதைகளையும் கட்டுரைகளையும் அறுவடை செய்திருக்கும் கவிஞர் அ ஜனசிந்தன் பெயருக்கேற்றார்போல ஒரு சிந்தனை சிற்பிதான்.
ஒவ்வொரு கவிதைகளிலும் காணப்படுகின்ற தமிழ்பற்று படிப்பவரை பரவசப்படுத்துகிறது, தமிழை நேசிப்பதுபோல இயற்கையை நேசிக்கும் இந்த கவிஞர் ஆறுகளைப்பற்றியும், பூமித்தாயைப்பற்றியும், எழுதி குவித்திருக்கும் கவிதைகளை படிக்கும்போது இவர் கரம் பிடித்து கைகுலுக்கி பாராட்டாமல் இருக்க முடிவதில்லை.
இன்றோ நதிகள் நாற்றமடிக்கின்றன
மணல் எனும் தன் மேலாடை இழந்து
அம்மணமானகாட்சி
பாட்டுக்கொரு புலவன் பாரதிக்கு இருந்தது போல சமுதாய கோபம் இவருக்கும் நிறையவே இருந்திருக்கிறது, மனித சிந்தனைகளை முடக்கிப்போடும் செயல்கள் கண்டு கொதித்தெழுகிறார் இந்த கவிஞர் அ. ஜனசிந்தன்.
இவரது கவிதைகளில் நிறைய காணக்கிடைப்பது தன்னம்பிக்கை வளர்க்கும் தரமான கவிதைகள். மாதம்தோறும் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் அமைத்து அதில் தன்னம்பிக்கை கவிதைகள் வாசித்து இளைய கவிஞர்களுக்கு வழிகாட்டியாய் இருந்துவருகிறார். அதுபோல மதுரை கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்திலும் மாதம்தோறும் கவிதைகள் வாசித்து பலரது புருவங்களை உயர வைத்திருக்கிறார்.
தமிழ்மொழி மீதான பற்றும் தழிழ் தன் வேர்களை ஆழப்படுத்தவும், தமிழ் தனது நிறத்தை இழக்காமல் இருக்கவும் இவரது தமிழ் ஆர்வ கவிதைகள் உதவியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. கண்தானம் பற்றிய இவரது கவிதைகள் சிறப்பு கவன ஈர்ப்பை பெற்றிருக்கின்றன, சிவகாசியில் லயன்ஸ் கிளப்பின் கண் தான கமிட்டியை கர்ண தேவர்களே என்றும்
விழி இழந்தோர் ஒளி பெற
காலம் பிரசவித்த கண்ணப்பர்கள்
என்று பாராட்டி கவிதை எழுதிய
இவரை பாராட்டியவர்கள் பலருண்டு..
பூமியைக்காப்பாற்றுங்கள் என்ற இவரது கவிதையை படிக்கின்றபோது கண்களின் ஓரம் கண்ணீர் கசியும். உனது ரத்தக்கடல்களில் மாகுண்டுகள் வைக்கிறோம்
தாக்கும்போது உனது முனகல் சப்தம் கேட்டது.
மிக அற்புதமான வரிகளால் நெய்யப்பட்டிருக்கிறது இந்த கவிதை.
தனது முதல் பிரசவ கவிதை பிறந்த கதையை சொல்லக்கேட்டபோது விழிகள் அகலமாகிக்கொண்டன. பத்து நிமிடத்தில் கவிதை எழுத சொல்லி ஐந்து தலைப்புகள் தந்தவுடன் செருப்பு என்ற தலைப்பில் இவர் எழுதிய
பூமாலை வாங்குபவர்
புனிதராக இல்லாவிட்டால்
செருப்பு மாலையும் விழும்
என்ற கவிதை பின்பு தேசியவலிமை இதழில் வெளிவந்ததைப்பார்த்து பரவசமானேன் என்றார் கவிஞர் அ. ஜனசிந்தன். எதிர்காலத்தில் ஒரு சிறந்த கவிஞராக வர பிள்ளையார் சுழி போட்ட கவிதை அது என்று சிலாகித்து சொல்லும் அவரை விழி உயர்த்தி பார்க்கத்தோன்றியது.
மனித நேய பண்பு இவரிடம் மலிந்து கிடக்கிறது சாலையோரம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியையும் அவள் குழந்தையையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று உயிரை காப்பாற்றி இருக்கிறார், இவரது மனித நேய பண்பை பாராட்டி தேசிய வலிமை மாத இதழ் இவரைப்பற்றி கட்டுரையாக வெளியிட்டு பெருமை சேர்த்துக்கொண்டது.
வாழ்வியல் மதிப்பீடுகளில் மாற்றம் விளைவிக்கும் சீரிய கவிதைகள் இவரது கவிதைகள். வாழ்க்கையை சிகரத்தில் ஏற்றிவிடும் இவரது சிந்தனைக்கவிதைகள் மற்றும் சிந்தனைக்கட்டுரைகள் தேசியவலிமை, மனிதநேயம், செம்மலர், முதற்சங்கு, அக்னிபுத்ரா, போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன,
2009-ல் பொறிகள் எனும் கவிதைத்தொகுப்பு நூல் வெளிவந்திருக்கிறது, இந்நூலில்
வெள்ளையர் சிறையிலிருந்து விடுதலையாகி இப்போது
கொள்ளையர் வீட்டில் குடியிருக்கிறோம் என்ற அற்புதமான வரிகளை மறைந்த சிந்தனையாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பாராட்டி கடிதம் அனுப்பியிருக்கிறார்.
2011-ல் தினமும் புத்தகங்களோடு பேசுவோம் என்ற நூல் (மணிமேகலை பிரசுரம்) வெளிவந்திருக்கிறது. இந்நூலில் காணக்கிடப்பவை எல்லாம் சிந்தனையைத்தூண்டும் கவிதைகள். வாழ்க்கையின் எல்லா தேடல்களையும் அனுபவ நிதர்சனங்களோடும் தன்னம்பிக்கை தளிர்களோடும் வாழ்வியல் சம்பவங்களோடும் சவால்களோடும் சிந்தனைக்கு விருந்து படைத்து மனச்சோர்வுகளுக்கு விலக்கமளித்து வாசகனை நிமிர வைக்கும் நிஜமான கவிதைகள் இந்நூலில் வியாபித்து கிடக்கின்றன.
இது தவிர மகாத்மா தேடும் மனிதர்கள் எனும் கட்டுரை நூலும், பூமியை புரட்டிய ரயில் எனும் வரலாற்று நூலும் அச்சில் உள்ளன. இன்னும் சில மாதங்களில் வெளிவர தயாராக உள்ளது.
வாரியார் அறக்கட்டளை சார்பில் வாரியார் சுவாமிகளின் வாய்மை கவிதைக்கு சிறந்த கவிஞர் எனும் பட்டம் பெற்றிருக்கிறார். இது தவிர 2009-ல் தமிழகக் கவிஞர் கலைமன்றம் சார்பில் கவிவேந்தர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
மத்திய அரசு பணியில் ரயில் எஞ்சின் உதவி ஓட்டுநராக பணி செய்து பணி ஓய்வு பெற்றிருக்கும் இந்த கவிஞர் மேலும் பல படைப்புகள் படைத்து அவை நூலாக வெளிவர முதற்சங்கு மனதார வாழ்த்துகிறது.
முகவரி: கவிஞர் அ. ஜனசிந்தன், 79, சொக்கநாதபுரம், விளாங்குடி, மதுரை-18 கைபேசி:9362881290 |
Last Updated on Wednesday, 20 June 2012 10:41 |
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா
|
Wednesday, 20 June 2012 10:34 |
கமல.செல்வராஜ்
காட்டுச்செடிகளுக்கு எவர் தயவும் தேவையில்லை தானாய் வளர்ந்து பூ பூத்து நறுமணங்களை வாரி வழங்கிவிடும், அதுபோலவே எழுத்தாளர் கமல.செல்வராஜ் அவர்களும், எவர் தயவுமின்றி எழுத்துலகில் தனி முத்திரை பதித்து நிற்கிறார்.
எதிர்படும் முகங்கள், கடந்து செல்லும் மனிதர்கள் எல்லோருக்கும் புன்னகை தந்தனுப்பும் புன்னகைக்கு சொந்தக்காரர் திரு கமல.செல்வராஜ்.
தனது நடை, தனது பார்வை என்ற சமூக கோணத்தில் இவர் பதிவு செய்து வைத்திருக்கும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், பலரது பார்வைகளில் விழுந்து எழும்போதெல்லாம் நல்ல பதிவுகள் என்ற நற்சான்றிதழ் கிடைத்து விடுகின்றன.
கவிதைகளில் எரிமலையின் வெப்பம் மேலோங்கி நிற்கும் தன்மையும், வாழ்வின் துயரங்களை படம் பிடித்துக்காட்டும் வல்லமையும் இவரது கவிதைகளில் விஞ்சி நிற்கும், இவரது கவிதைகளில் விளைந்து கிடக்கும் கருத்துச் செறிவுகள் காலத்தால் அழியாத வரிகளாக, சமுதாய சீர்கேடுகளை தட்டிக்கேட்கும் விழிப்புணர்வு கவிதைகளாக மலர்ந்து மணம் பரப்பி நிற்கின்றன,
சமுதாய வாசனை தட்வி நிற்கும் இவர் கவிதைகளை ஒருங்கிணைத்து கூந்தலை தட்டி முடி எனும் கவிதைத்தொகுப்பு நூல் வெளியிட்டிருக்கிறார். வாழ்க்கையின் குறுக்கு வெட்டு தோற்றங்களை இவரது கவிதைகளில் காணலாம்.
தன் மன அதிர்வுகளை உணர்த்த துடிக்கும் வீணைக்கவிஞர், பொய்யில்லாத, பாவனையில்லாத, திரையில்லாத, முகமூடியில்லாத வெள்ளைக்கவிஞர் இவர் என்று சாகித்திய விருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் இவரை பாராட்டுகிறார்.
நீ
பிள்ளையாய் இருந்தபோது
தந்தைக்கு அடிமையாம்
இல்லறம் புகுந்தபின்
தலைவனுக்கு அடிமையாம்
வயோதிகம் அடைந்தபின்னே
மகனுக்கு அடிமையாம்
என்னும் மனுதர்ம அடிமைத்தன கோட்பாட்டைக் கேள்விக்குறியாக்குகிறது இவரது கவிதை. இவரது கவிதைகள் தினமலர் நாளிதழ், தினமலர்-வாரமலர், சமுதாய நண்பன், சிறுமலர், முதற்சங்கு போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
விருட்ச மரங்களின் வேர்கள் ஆழ அகலம் தேடிப்போவதைப்போல இவரது சிறுகதைகள் நீண்டு அகலம் சென்று வாசகனை வசமடைய வைத்து அவன் விழிகளை வரிகளிலிருந்து அப்புறப்படுத்தாமல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வல்லமை இவரது சிறுகதைகளுக்கு உண்டு.
தங்களது இயல்பான சுபாவங்களை மாற்றிக்கொண்டு வாழும் மனிதர்களின் முகமறிந்து கதை புனைவதில் இவர் அதிகம் கவனம் பெறுகிறார். இவர் எழுதிய கதைகள் முற்றம், கல்லூரி ஆண்டுமலர் போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கிறது.
சமுதாயத்தின் பல்வேறு அசைவுகளை காட்டும் பல கட்டுரைகள் இவர் எழுதியிருக்கிறார். அவை அச்சத்தை விதைக்காமல் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் விதைத்து விடுகிறது. இதனால் பலன் அடைந்தவர்களின் பாராட்டு மழையில் தினம் நனைபவர்.
இவரது கட்டுரைகள் தினமலர் வாரமலர், சமுதாய நண்பன், குமரிக்கடல், முதற்சங்கு போன்ற இதழ்களில் வெளியாகி இருக்கின்றன.
பத்திரிகை துறையில் பரவலான ஈடுபாடு கொண்டவர். எழுத்தின் மீது அவருக்கிருக்கும் ஆர்வம் அலாதியானது. ஆரம்பத்தில் தினமலர் நாளிதழின் நிருபராக பதினான்கு ஆண்டுகள் பணியாற்றிக்கொண்டே பல படைப்புகளையும் தினமலரில் எழுதியிருக்கிறார்.
குமரி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் துவங்கி அதன் தலைவராக இருந்து பலரின் வாழ்வியல் ஆழங்களை அறிந்து கொண்டவர்.
படந்தாலுமூடு கிரேஸ் கல்வி நிறுவனத்தில் முதல்வராக பணியாற்றிக்கொண்டே எழுத்தை நேசிப்பவர். இவர் ஒரு சமூக சேவகரும் கூட, சிதறால் சித்ராலயா சேவா டிரஸ்ட் புரவலராக இருந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிறைய சேவைகள் செய்து வருகிறார்.
குமரிமாவட்ட போதை தடுப்பு இயக்க துணைத்தலைவராகவும், அருமனை பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தலைவர் மற்றும் புரவலராகவும்,மார்த்தாண்டம் இலக்கிய பேரவையின் உறுப்பினராகவும் இருந்து இலக்கிய பணியும் சமுதாயப்பணியும் இணைத்து செயல்படுபவர்.
இவர் எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு சிறந்த பேச்சாளரும்கூட, இவர் மேடைகளில் பேச தொடாங்கினால் தடையில்லா நீரோட்டம் போல வார்த்தைகள் இலக்கியம் கலந்து வந்து விழும். பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள், சுழலும் சொல்லரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் இவரது இலக்கிய பேச்சு பலரது இதயங்களில் இடம் பெற்று விடும்.
இது தவிர பல்வேறு வானொலி நிகழ்சியிலும் கலந்துகொண்டு மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறந்த மக்கள் கலைஞர் திரு கமல.செல்வராஜ். இவரது இலக்கிய ஆர்வத்தைப் பாராட்டி குமரிமாவட்ட கவிதை உறவு அமைப்பு இவருக்கு ஆய்வுச்சுடர் விருது அளித்துள்ளது.
இவரது படைப்புகள் மீது ஆய்வு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கும் மேலாக இருக்க்கிறது. ஆய்வாளர் எ. ஜான்சிராணி குமரிமாவட்ட எழுத்தாளர் கமல.செல்வராஜ் எனும் தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார். ஜே.சிங் என்பவர் கமல.செல்வராஜ் கவிதைகள் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார்.
பொ.செந்தில்குமார் அவர்கள் கமல.செல்வராஜ் கவிதைகள் ஓர் ஆய்வு எனும் ஆய்வையும், டா.நான்சி மாணவி கமல.செல்வராஜின் கட்டுரைகளில் சமுதாயப் பார்வை எனும் ஆய்வையும், கமல.செல்வராஜின் கூந்தலை தட்டி முடி – குமரி ஆதவனின் எரிதழல் கொண்டுவா கவிதை நூல் ஒப்பீடு செய்து திரு என்பவர் ஆய்வு செய்திருக்கிறார்.
வரதட்சணை இல்லையேல் வாழ்க்கையில்லை எனும் வாதங்கள் ,மலிந்து கிடக்கும் குமரி மண்ணில் மணி முத்தாய் அவதரித்திருப்பவர் திரு கமல.செல்வராஜ் அவர்கள் எம்.ஏ, எம்.ஃபில், எம்.எட், டி.ஜே என பல பட்டங்கள் பெற்றிருக்கும் இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து மினி என்ற மங்கையை வரதட்சணை எதுவுமின்றி தன்னுடைய வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டவர்.
எல்லோரும் ரத்த தானம் கண் தானம் செய்யும்போது இவர் தனது உடலையே தானம் செய்து வைத்திருப்பது மற்றுமொரு வியப்பான செய்தி.
வருங்காலத்தில் இவர் இன்னும் பல படைப்புகள் தந்து அவைகளெல்லாம் நூலாகி நிறைய ஆய்வுகள் வெளியாகி இலக்கிய உலகம் இவரை உயர்ந்த இடத்தில் வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. முகவரி: கமல. செல்வராஜ், சித்ராலயம், அருமனை-629 151 கைபேசி: 9443559841 |
Last Updated on Wednesday, 20 June 2012 10:38 |
|
|